உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கயாஸ்பூர் தொடக்கப் பள்ளியில், தங்கள் தலைமை ஆசிரியர் வந்து பாடம் கற்பித்தால் தான் பள்ளிக்கு வருவோம் என கூறிய மாணவர்கள் நேற்று பள்ளியில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தின் கயாஸ்பூர் அரசு துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக புர்ஹான் அலி பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் தினமும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன், இஸ்லாமிய கவிஞர் முகமது இக்பால் 1902-ஆம் ஆண்டில் எழுதிய கவிதையை, மாணவர்கள் வாசிக்க புர்ஹான் அலி கட்டாயப்படுத்துவதாக அப்பகுதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புகார் அளித்தனர். இந்த புகார் மனுவை விசாரித்த பிஷல்பூர் பகுதி கல்வி அலுவலர் உபேந்திர குமார், தலைமை ஆசிரியர் புர்ஹான் அலியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், கயாஸ்பூர் தொடக்கப் பள்ளியில், தங்கள் தலைமை ஆசிரியர் வந்து பாடம் கற்பித்தால் தான் பள்ளிக்கு வருவோம் என கூறிய மாணவர்கள் நேற்று பள்ளியில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்த அடிப்படை கல்வி அமைச்சர் சதீஷ் சந்திர திவேதி கூறுகையில், ”தலைமை ஆசிரியர் இஸ்லாமிய கவிதை வாசிக்க கட்டாயப்படுத்துகிறார் என்று முதலில் எண்ணப்பட்டது. ஆனால் அது கவிஞர் முகமது இக்பாலின் தேசப்பற்றை ஊட்டக்கூடிய கவிதை என்று பின்பு தான் கண்டறியப்பட்டது. உண்மையை கண்டறியாமல், பிஷல்பூர் பகுதி கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் தலைமை ஆசிரியர் மீது அவசர நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து கல்வி இயக்குநரகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் தலைமை ஆசிரியரின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படும்” என்று கூறினார்.
இது குறித்து பிஷல்பூர் பகுதி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தலைமை ஆசிரியர் புர்ஹான் அலி தனது சொந்த பணத்தை பள்ளி உள்கட்டமைப்புக்காக பலமுறை செலவிட்டார். அவர் தன் சொந்த செலவில் ரூ.65,000 மதிப்புள்ள ஒரு ப்ரொஜெக்டரை வாங்கி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையைத் தொடங்கினார். பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த அவர் தனது சம்பளத்திலிருந்து தவறாமல் பங்களிப்பு செய்து வந்தார்” என்று தெரிவித்தார்.